தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யகோரி மயிலாடுதுறை அருகே கரும்பில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வானாதிராஜபுரம், கடலங்குடி, மன்னம்பந்தல், காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பான செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முழு கரும்பினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதாக அறிவிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வானாதிராஜபுரம் கிராமத்தில் கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள கரும்புகளில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த விவசாயிகள், கடந்த ஆண்டு திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்காக கரும்புக்கு 15 ரூபாய் வழங்கி விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பினை கொள்முதல் செய்ததாகவும், இந்த ஆண்டு கொள்முதல் செய்யாததால் தனியார் வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கு கரும்பினை கேட்பதாகவும் தெரிவித்தனர். கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து அரசு அறிவிக்காவிட்டால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…