சமீப காலமாகவே சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதை குறைத்திடும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இந்த "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்". இந்த திட்டத்தின் முக்கிய அங்கமே சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாகும். இந்த முதன் முதலில் 18.12.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கட்டுரையில், நம்மை காக்கும் 48 திட்டத்தின் முழு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நம்மை காக்கும் 48 திட்டம்!
➦ சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இலவச மருத்துவ திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது.
➦ அதன்படி அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் 204 அரசு மற்றும் 405 தனியார் மருத்துவமனைகள் என மாநிலம் முழுவதும் 609 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள், பல்வேறு விவரங்கள் தேவைப்பட்டன.
➦ அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவச் சேவை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்ட நபர் அவருடைய பணிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். தற்போது அவையெல்லாம் இல்லாமல் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.
➦ இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
➦ விபத்து நடந்தவுடன் எந்தவித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும், அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும், நோயாளியின் தேவையற்ற இடமாற்றத்தை தவிர்ப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
Also Read | இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் மருத்துவமனை பட்டியல்! | NK 48 Scheme Hospital List in Tamil
48 மணிநேரத்திற்கு மேல் சிகிச்சை:
இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும்,
➦ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.
➦ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையைக் கட்டணமில்லாமல் தொடரலாம்.
➦ சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையைப் பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையைத் தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…