கலிபோர்னியாவில் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கட்கிழமை இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை அருஹி தேரி மற்றும் அவரது பெற்றோர்கள் ஜஸ்தீப் சிங் (வயது 36), ஜஸ்லீன் கவுர் (வயது 27) மற்றும் உறவினர் அமந்தீப் சிங் (வயது 39) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பமே கடத்தப்பட்ட சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெற்கு நெடுஞ்சாலை 59 இன் 800 பிளாக்கில் நடந்த கடத்தல் குறித்து கலிஃபோர்னியா போலீசார் விசாரணை நடத்திவந்தனர். பின்னர், நேற்று குற்றவாளி கடத்தப்பட்ட நபர்களில் ஒருவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த முயன்று உள்ளார். அப்போது போலீசார் அவரை அடையாளம் கண்டு உள்ளனர். இந்தியக் குடும்பத்தைக் கடத்திய அந்த நபர் 48 வயதான ஜீசஸ் சல்காடோ என்று அடையாளம் காணப்பட்டது.
குற்றவாளிக்குப் பிடிக்க முயன்ற போது, திடீரென அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இருப்பினும் அவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். குற்றவாளியை பிடித்தும் கடத்தப்பட்ட குடும்பத்தை பற்றிய எந்த விபரமும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், இன்று கடத்தப்பட்டவர் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் அட்ரே, தனது கலிபோர்னியா வீட்டில் இருந்து கடத்தப்பட்ட செய்தி வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது காதலியின் காரில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…