ஜம்மு மற்றும் காஷ்மீரில் G-20 இன் 2023 கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜி20 உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு செல்வாக்குமிக்க குழுவாகும். இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தீராத பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது உலக நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டு ஆகஸ்ட் 2019 இல் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் முதல் சர்வதேச உச்சிமாநாடு இதுவாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜி20க்கான இந்தியாவின் ஷெர்பாவாக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1, 2022 முதல் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வகிக்கும் என்றும், 2023 ஆம் ஆண்டில் ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டை முதன்முறையாக இந்தியா நடத்தும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாடு நடக்க உள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை யூனியன் பிரதேச அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக யூனியன் பிரதேசத்தின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் இருப்பார்.
1999இல் ஜி20 குழு தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியா உறுப்பு நாடாக இருந்து வருகிறது. மேலும் பிரதமர் மோடி 2014 முதல் ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 1, 2021 முதல் நவம்பர் 30, 2024 வரை G20 Troika (முந்தைய, தற்போதைய மற்றும் உள்வரும் G20 ஜனாதிபதிகள்) பகுதியாக இந்தியா இருக்கும்.
G20 உலகின் 19 முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்றிணைக்கிறது. அதன் உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவிகிதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 60 சதவிகிதம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஜி20 உறுப்பு நாடுகளாகும்.
இந்தியா உலகுக்கு சொல்லும் சேதி
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், 1948இல் ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமித்த பாகிஸ்தான் குறிப்பிட்ட சில நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு தன்னோடு இணைத்துக் கொள்ளவோ அல்லது தனி நாடாக ஆக்கவோ குரல் கொடுத்து வருகிறது.
மேலும் ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்து ஜம்மு காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாகவே வைத்திருக்க முயல்கிறது.
இந்நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்களை ஜம்மு காஷ்மீரில் நடக்கும் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வைப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அந்நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சீனா மற்றும் துருக்கியும் இந்த ஜி20 குழுவில் இருப்பதால், அவை எத்தகைய முடிவை எடுக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…