Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Microsoft Layoffs: இன்று முதல் ஆரம்பம்; 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்! 

KANIMOZHI Updated:
Microsoft Layoffs: இன்று முதல் ஆரம்பம்; 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்! Representative Image.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 5 சதவீத ஊழியர்களை அதாவது 11 ஆயிரம் பேரை இன்று முதல் பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐ.டி. ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பணவீக்கம், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்அப் வரை செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், லாபத்தை அதிகரிக்கவும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய சில நாட்களிலேயே அதில் பணியாற்றி வந்த 50 சதவீத ஊழியர்கள், அதாவது 3,700 பேரை பணி நீக்கம் செய்தார். 

இந்நிலையில் 2023ம் ஆண்டின் தொடக்கமாக உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 5 சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளான இன்று குறைந்தது 1000 ஊழியர்களாவது பணியை வீட்டு நீக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.  ஏற்கனவே கடந்த ஆண்டில் இரண்டு முறை ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக மூன்றாவது முறை அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று முதல் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாகவும், முதலில் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1,000 ஊழியர்களையும்,  அதற்கு முன், ஆகஸ்டில் சொற்ப அளவிலான ஊழியர்களையும் பணி நீக்கம் செய்த நிலையில், 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் 11 ஆயிரம் பேரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்