தமிழகத்தின் மிக முக்கியமான பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார்.
சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இயங்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து வரும் ஜூலை 29 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதன்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை வருகிறார். இதையடுத்து, ஜூலை 29ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சரும் அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி மற்றும் துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…