தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்" தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 20 வகையான விவசாயப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.
இந்த வேஷ்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடையாமல், பரிசுத்தொகுப்பினை பெறுவோரும் திருப்தி அடையாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். தரமான பொருட்களும் கிடைக்கப் பெற்று, பரிசு தொகுப்பு பெறுவோரும் மகிழ்ச்சி அடைவார். இதனை பரிசீலிக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பொங்கல் பரிசு தொகையை ரேஷன் காட்டுதாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு தரப்பில் குறுகிய காலமே இருப்பதால் வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பது கடினம். அதோடு மினிமம் பேலன்ஸ் எனக்கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் பலன் முழுமையாக கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதோடு மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால், அவற்றை பிரிப்பதிலும் சிக்கல் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் மின் இணைப்புகளோடு ஆதாரை இணைக்கும் பணியை போல, இந்த பணியையும் செய்யலாமே? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…