சென்னையில் 40 கி.மீ வேகத்திற்கும் அதிகமாக வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்ற காவல்துறையின் புதிய கட்டுப்பாட்டிற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, புதிய ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பகலில் 40 கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் தாண்டினால், இனி அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்திருந்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், தற்போது லாரி உரிமையாளர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
40 கி.மீ வேகத்திற்குள் வாகனத்தை இயக்கும்போது டீசல் பயன்பாட்டில் நஷ்டம் ஏற்படுவதோடு, நகருக்குள் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சென்னை, எழிலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி
அழகேசன், சென்னையில் வாகனங்களை இயக்க வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது தவறானது. அடிப்படையில் வாகனங்களே அப்படி தயாரிக்கப்படுவதில்லை. கியர்களை சரியாக இயக்கினால்தான் வாகனங்களின் டீசல் பயன்பாடு சரியான அளவில் இருக்கும்.
35-40 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க கூறுவது எவ்விதத்தில் நியாயமானது? முதல் கியரில் வண்டியை இயக்கும்போது மற்ற கியர்களை போடாமல் எப்படி இயக்குவது?.இதனால் பெட்ரோல் டீசல் பயன்பாடு அதிகரிப்பதோடு, ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறைந்த வேகத்தில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்கும்போது நேர விரயம் ஏற்படும். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசு வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்கினால் சரியாக இருக்குமா?. இரு சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகளுக்கு தனித்தனியாக லேன்களை உருவாக்கினால் விபத்துகள் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…