மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றதன் மூலமாக தனது 21 ஆண்டுகால வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் அலி முஷ்டாலி அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இதனால் விரைவில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எங்கு பெயர் தெரியாத இடத்தில் டென்ட் அமைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்ற சிறுவன், அன்றாட செலவுகளுக்காக பானி பூரி விற்ற இளைஞன், இன்று இந்திய டெஸ்ட் அணிக்காக களமிறங்கப் போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், 21 வருட வாழ்க்கையில் நான் கண்ட ஒரே கனவு இதுமட்டும்தான். அது நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு இரவிலும் எனது படுக்கையில் இருந்து இந்திய ஜெர்சியை அணிந்து சதம் விளாசிய ரசிகர்கள் முன் கைகளை விரித்து கொண்டாடுவது போல் கனவு கண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை விடவும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் கூட 13 பந்துகளில் அரைசதம் அடிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. எந்தவொரு விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்றாலும், தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும். அதனை பின்பற்றி வருகிறேன். கிரிக்கெட்டில் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரின் இடதுகை ஆட்டமும் முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…