போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள், தங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதியைப் பெற்ற பின்னர், நேற்று மாலை தங்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.
முதல் நடவடிக்கையாக பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் ராஜினாமா செய்தார்.
இந்திய மல்யுத்த சங்க தலைவரால் பெண்கள் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த குழு விசாரணை நடத்துவதோடு மட்டுமல்லாது கூட்டமைப்பின் அன்றாட நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும்.
இந்த குழு தனது அறிக்கையை ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.
"ஒரு மேற்பார்வைக் குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெறுபவர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும். குழு நான்கு வாரங்களுக்குள் தனது விசாரணையை முடிக்கும். இந்திய மல்யுத்த சங்கம் மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்தையும் இது முழுமையாக விசாரிக்கும்.” என்று அனுராக் தாக்கூர் ஐந்து மணி நேரம் நீடித்த கூட்டத்திற்கு பிறகு கூறினார்.
"விசாரணை முடியும் வரை, பிரிஜ் பூஷன் ஷரன் சிங் தலைமை பொறுப்பில் இருந்து ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேலும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அன்றாட விவகாரங்களை மேற்பார்வைக் குழு நடத்தும்." என்று தாக்கூர் மேலும் கூறினார்.
இதற்கிடையே ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பஜ்ரங் புனியா, தாங்கள் ஒருபோதும் போராட்டப் பாதையில் செல்ல விரும்பவில்லை, ஆனால் மல்யுத்த சங்க நிர்வாகிகள் தான் எங்களை போராட்டத்தில் தள்ளிவிட்டனர் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…