உலகெங்கிலும் ரயில்கள் மோது விபத்துகள் நடப்பதை தடுப்பதற்காகவே பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன்படி, சிக்னலே மோதி ரயிலை நிறுத்துவது, காந்த சக்தி மூலம் பிரேக்கை இயக்குவது, மின் அதிர்வுகளை செலுத்தி பிரேக்கை இயக்குவது, ரேடியோ அலைகள் மூலம் தகவல் அனுப்பி எச்சரிப்பது, அருகில் உள்ள ரயில்கள் பற்றிய தகவல்களை வயர்லெஸ் சிக்னல் மூலம் என்று ரயில்களிலும் மெட்ரோ ரயில்களிலும் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், ரயில்வே ஸ்டேஷன்கள், தண்டவாளங்கள், சிக்னல் கட்டுப்பாட்டு அறைகள் என அனைத்து இடங்களிலும் எலெக்ட்ரானிக் கருவிகள் பொருத்த வேண்டும். சுமார் ஒரு கிலோமீட்டர் தூர தண்டவாளத்தில் இந்த கருவிகளை பொருத்த வேண்டும் என்றால் கூட கிட்டத்தட்ட 2-3 கோடி ரூபாய் வரை செலவாகலாம். அதனால், இது வசதியான நாடுகளுக்கு மட்டுமே பொருந்துகிற தொழில்நுட்பமாக இருந்தது.
ஆனால், இந்தியர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தரவேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வே தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்க 11 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டது தான் கவாச் (Kavach Technology) தொழில்நுட்பம். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இந்த பிரத்யேக தொழில்நுட்பம் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்துதான் செயல்பாட்டு வந்தது. கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன? அது எப்படி ரயில் விபத்தை தடுக்கும்? என்பது முழுத்தகவல்களையும் விரிவாக பார்க்கலாம்.
'கவாச்' தொழில்நுட்பம் என்றால் என்ன?
ஆட்டோமேட்டிக் டிரெயின் புரொடக்சன் (Automatic Train Protection) இதையே கவாச் என அழைக்கின்றோம். 'கவாச்' என்பதற்கு 'கவசம்' என்பதே பொருள். இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி அமைப்பான Research Design and Standards Organization (RDSO) இந்த கருவியை பல்வேறு இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியது. இந்த தானியங்கி கருவியான கவாச் இந்திய ரயில்களில் ஏற்படும் விபத்துக்களை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் திறன் கொண்டது.
கவாச் கருவியின் முக்கிய அம்சங்கள்:
லெவல் கிராசிங்குகளை நெருங்கும்போது விசில் எழுப்பி எச்சரிக்கை விடும். ரயில் பைலட்டின் கட்டுப்பாட்டை மீறி குறித்த வேகத்தைவிட அதிவேகமாக ரயில் சென்றால், எச்சரித்து வேகத்தையும் குறைக்கும்.
சிவப்பு சிக்னலை கவனிக்காமலோ, சிக்னல் தவறாலோ இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி செயல்பட்டு அலாரம் அடித்து ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கும். அதன்பின்னர், தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு எஞ்சின்களையும் நிறுத்திவிடும்.
பனிமூட்டமான நேரங்களில் பாதை தெளிவாக தெரியாது. அதுபோன்ற சூழல்களில் லைன் சைட் சிக்னலை காட்டி மோதல்களை தடுக்கும். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் சென்றாலும் கூட இதன் எச்சரிக்கைகள் துல்லியமாக இருக்கும். ஆகையால், இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும் வழி தடத்தில் விபத்து என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.
ஆனால், இந்த கருவி பொருத்தப்பட்டு இருந்தால் நிச்சயம் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என கூறி விட முடியாது. ஏனெனில், கவாச் சிஸ்டம் ரயில்கள் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் என்றால் மட்டுமே அது வேலை செய்யுமே தவிர, ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் தடம் புரண்ட ரயில்களை எச்சரிக்காது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…