நம்மில் பலருக்கும் சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீர்நிலை சார்ந்த பகுதிகளை தான் தேர்வு செய்வோம். அதுவும் கடற்கரை பகுதி ஒருபடி மேல் என்றே சொல்லலாம். அப்படி கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே, நம் தமிழ்நாட்டில் உள்ள ஃபேமஸான கடற்கரைகளை பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து சென்று வாருங்கள்.
கடற்கரை என்றவுடன் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரையாக தான் இருக்கும். உலகளவில் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாக விளங்கும் இந்த மெரினா கடற்கரை, தெற்கில் பெசன்ட் நகரிலிருந்து வடக்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 1880 ஆம் ஆண்டுகளில் கவர்னர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் என்பவரால் புதுப்பிக்கப்பட்ட இந்த கடற்கரை அன்றிலிருந்து சென்னை நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கடற்கரைக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு பல புகழ்பெற்ற இந்திய தலைவர்களின் வாழ்கையை நினைவுக்கூறும் வகையில் ஏராளமான நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத் தீவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த தனுஷ்கோடி கடற்கரையில் தான் வம்கள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் ஒன்று கூடுகின்றன. இலங்கையுடன் வாணிபம் செய்வதற்காக பயன்படுத்த சிறந்த துறைமுகமாவும் இருந்தது. எப்போதும் கூட்டம் அலைமோதும் இடமாக காணப்பட்ட இந்த தனுஷ்கோடி தற்போது ஆளே இல்லாத பாலைவனம்போல காட்சியளிக்கிறது. ஆமாங்க, 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான சூராவலியால் தனுஷ்கோடயே மொத்தமாக அழிந்துப்போய்விட்டது. இந்தியாவின் எல்லையாக விளங்கும் இந்த தனுஷ்கோடியில் தான் ராமர் வானரங்களை கொண்ட கற்களால் கட்டப்பட்ட அதிசய பாலம் இருந்தது. தற்போது சுற்றுத்தல இடமாக இருந்து வரும் இங்கு அமைந்திருக்கும் ராமர் கோவிலில் இன்றும் ஒரு கல் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் தான் அரபிக் கடல், இந்திய பெருங்கடல் மற்றும் வங்காளா விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த குமரி கடலின் நடுவில் தான் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் உள்ளது. இங்கு சூர்ய உதயம் மற்றும் சூர்ய மறைவு இரண்டையும் அருகில் இருந்து கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல், சித்ரா பௌர்ணமி தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே அடிவானத்தில் இருக்கும் அழகிய காட்சியை பார்க்க முடியும்.
கோவளம் என்ற பெயரைக் கேட்டாலே கேரளாவிலிருக்கும் (திருவனந்தபுரம்) கடற்கரை தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், நம்ம தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலும் 'கோவளம்' என்ற பெயரில் ஒரு அழகிய கடற்கரை இருக்கிறது. சென்னையில் இருந்து 40 கி.மீ தென் திசையில், கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் செல்லும் வழியில், கோவளம் என்ற மீனவ கிராமம் இருக்கிறது. இங்கு அமைந்திருக்கும் கடற்கரை தான் கோவளம். சென்னையில் காணப்படும் மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த கோவளத்தில், பாறைகள் மீது அலைகள் மோதி அடிக்கும் காட்சியையும், மணல் நிறைந்த நீண்ட கடற்கரைப் பகுதியையும், நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த கடற்கரையின் வளைவானத் தோற்றம் இதன் அழகை மேலும் மிளிரச் செய்கிறது.
கோவில்கள் முதல் அற்புதமான சிற்பங்கள் நிறைந்தை வரலாற்று சிறப்புடைய இடமான மகாபலிபுரம் தங்க மணல் நிறைந்த கடற்கரைக்கு பெயர் பெற்றது. பளபளக்கும் கடல் மற்றும் உருளும் மலைகளால் சூழப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை வங்காள விரிகுடாவின் கரையோரமாக உள்ளது. ஆண்டுதோறும் சுற்றுப்பயணிகளால் நிரம்பி வழியும் இந்த கடற்கரை இந்தியாவின் மிக நீளமான கடற்கரைகளில் (20 கி.மீ) ஒன்றாகவும் உள்ளது. மேலும், இந்த கடற்கரை டைவிங், விண்ட்சர்ஃபிங் மற்றும் மோட்டார் படகு சவாரி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சொத்தவிளை கடற்கரையில் நீரின் ஆழம் குறைவு. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி நீந்தலாம். 4 கிமீ நீளம் கொண்ட சொத்தவிளை தமிழகத்தின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோத்தவிளையும் ஒன்றாகும். இருப்பினும், கடற்கரை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வெள்ளி கடற்கரையானது, சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தப்படியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுகிறது. அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே இருக்கும் மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்துள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மேலும் ஆங்கிலேயர் காலத்து கட்டிடமான புனித டேவிட் கோட்டை மற்றும் ஏராளமான சுற்றுலா இடங்கள் அங்கு இருக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…