திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். இங்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டுவந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு கஜ பூஜை , கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு. கொடிபட்டம் எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றபட்டது. அதைத் தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இன்று முதல் 10 நாட்கள் இந்த ஆனித் திருவிழா நடைபெறவுள்ளது . ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் காலை, மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். மேலும், ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி, நாள்தோறும் மாலை வேளையில் ஆன்மீக சொற்பொழிவு , கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வரும் 2ம் (ஜூலை.2) தேதி நடைபெறவுள்ளது. தேர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்வில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…