தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் ஒன்று தான் விவசாயிகளுக்கு வெளி நாட்டில் பயிற்சி அளிக்கும் திட்டம். அதாவது, அயல்நாடுகளில் உயர் ரக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கின்றது. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை நம் விவசாயிகள் பார்ப்பதால் அவர்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும்; அது சாகுபடி தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும்.
அந்தவகையில், 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பயிற்சி திட்டத்துக்கு ஒன்றிய, மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…