சென்னையில் குடிபோதையில் தனது காதலியை பற்றி தவறாக பேசிய உயிர்நண்பனை அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள கேளியம்மன் கோவில் பின்புறம் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கினர்.
அப்போது சடலமாக கிடந்தது கேளம்பாக்கம் ஶ்ரீராமலு தெருவை சேர்ந்த லட்சுமிகாந்த் (20) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்த் கையில் பிரதீப், சூர்யா என பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து, அதே பகுதியை சேர்ந்த 20 வயதான பிரதீப் மற்றும் சூர்யாவை பிடித்து உரிய முறையில் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
லட்சுமிகாந்த் மதுபோதையில் பிரதீப்குமாரின் காதலியை தவறாக பேசியதால் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறியதில் பிரதீப்குமார் பீர்பாட்டிலால் லட்சுமிகாந்தின் தலையில் அடித்துள்ளார். அப்போது லட்சுமிகாந்த் தப்பி ஓட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், பிரதீப் குமாரின் நண்பர் சதீஷ் கண்ணன் அவரின் தலையில் கல்லைபோட்டு தாக்கியதில், லட்சுமிகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
கொலைக்கான காரணம் தெரியவந்த நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தனிப்படை அமைத்து வெறும் 7 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…