காஞ்சிபுரம் பிள்ளைச்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை உபகரணங்கள் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் சேதமடைந்தன.
தமிழகத்தின் மின் தேவை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இவற்றில், காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலைகள் உள்ளன.
மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்துவருவதால், பல நிறுவனங்கள் காற்றாலை மூலம் மின் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 சக்கரங்களைக் கொண்ட 70 அடி நீளமுள்ள மூன்று லாரிகளில் காற்றாலைகள் இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
சுமார் 120 அடி நீளம் கொண்ட பத்து டன் எடையுள்ள காற்றாலை இறக்கையுடன் கூடிய, 1.8 மெகா வாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டரை பூந்தமல்லியில் உள்ள நிறுவனத்திடம் வாங்கி என்டிசி குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.அந்த வகையில், பூந்தமல்லியில் ஆர்.ஆர்.பி., எரிசக்தி நிறுவனம் மற்றும் வெஸ்டாஸ் நிறுவனம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மாலை பிள்ளைச்சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்குகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை ரெக்கைகளுடன் சுமார் 20 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று லாரிகள் ஏரியில் கவிழ்ந்தன. அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன்மீது லாரி கவிழ்ந்ததால் உபகரணங்களில் அதிக சேதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவரை என் டி சி லார்ஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் காற்றாலை உற்பத்தி நிறுவன அதிகாரிகளும் சுற்றிவளைத்து, செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதோடு, அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து கொலைமிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக், தாலுகா காவல் ஆய்வாளர் பேசி பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேரில்வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்ததைத் தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பிள்ளைச்சத்திரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…