வேலூர் அருகே பாம்பு கடித்து கூலித்தொழிலாளி உயிரிழந்துவிட்டதால் மலைவாழ் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுபோன்று நடைபெறாமல் இருக்க மலைப்பகுதியில் 24 மணி நேரமும் பாம்பு கடிக்கு தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் மலைப்பகுதிகளில் பல்வேறு தொழில்களில், குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை ஓரளவு மட்டுமே மலைப் பகுதிகளில் பெற்றுக் கொள்ள முடிகிறது. பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக மலையில் இருந்து இறங்கி வந்து அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாங்கிச் செல்கின்றனர்.
மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது அவர்கள் வாழும் பகுதிக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இக்கோரிக்கைகளை வைத்து எந்தவிதமான தேர்தல்கள் இருந்தாலும் அதில் ஒரு தேர்தல் வாக்குறுதியாக சாலை அமைத்து தருவேன் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்து வருகின்றனர். அந்த தேர்தல் வாக்குறுதிகள் வெற்றி பெறும் வரை மட்டுமே இருக்கின்றது. அதன் பிறகு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவ்வளவாக முயற்சி எடுப்பதில்லை என்று அங்கு வாழும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு சாலை வசதியும் மருத்துவ வசதியும் தான் அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதற்கு காரணம் மலைவாழ் மக்கள் பிரசவத்திற்காகவும் விஷக்கடிகளுக்காகவும் அதிக அளவில் மருத்துவம் தேவைப்படுகிறது. மலைப்பகுதியில் பல்வேறு விதமான விஷக்கடி உயிரினங்கள் இருப்பதால் , விஷக்கடிகளுக்கு ஆளாகும் நபர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அங்கு போதிய வசதி இல்லை.
இந்நிலையில் வேலூர் அடுத்த அணைக்கட்டு தாலுக்கா அல்லேரி மலை கிராமத்தின் அருகே உள்ள ஆட்டுக் கொந்தரை குக்கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர் கூலி தொழிலாளி. இவரை நள்ளிரவு பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்து சங்கர் அலறியதால் அருகில் இருந்த உறவினர்கள், அவரை மீட்டு அலேரி மலையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அப்போது கொண்டு செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டரை வயது பெண் குழந்தை பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற துயரசம்பவங்களை தடுக்க அல்லேரி மலையில் தனியாக ஓர் ஆம்புலன்ஸ் மாவட்ட ஆட்சியர் மூலம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் நிரந்தரமாக விஷக்கடிகளுக்கு தனியாக ஒரு மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…