வேலூர்: கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் கார் கொடுத்தது ஒரு அரசியல்தான். ஜெயலலிதா காலத்திலேயே பெண் ஓட்டுநர் இருந்துள்ளார். அப்பொழுது ஏன் அரசியல் செய்யவில்லை? அப்பொழுது ஏன் கார் வாங்கி கொடுக்கவில்லை? என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாநகரில் இரண்டு இடங்களில் தேமுதிக கொடியேற்றும் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் விருப்பாச்சிபுரத்தில் மறைந்த முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளர் வி.பி.வேலு இல்லத்திற்குச் சென்ற அவர், வேலுவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கு நிதி உதவியையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கள்ளச்சாராயம் தமிழகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரையில் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச்சாராயத்தினால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், படுகொலைகள், பெண்கள் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள்தான். இதனால், சட்டம்- ஒழுங்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு ரெய்டு வருவது குறித்து முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்றும், போலீஸ் பாதுகாப்பு கொடுப்போம் என்று திமுகவினர் கூறுகின்றனர். எந்த ஊரில் ரெய்டு வருபவர்கள் முன்கூட்டியே அறிவித்து விட்டுவருகிறார்கள்?. ரெய்டு வருவதற்கெல்லாம் புதிய விளக்கத்தை இவர்கள்தான் கொடுக்கிறார்கள். கேட்டால் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள்.
மின் கட்டண உயர்வு என அறிவித்துள்ளனர். அதில் மத்திய அரசு அறிவித்தபடி என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். ஏனென்றால் இது இவர்கள்மீது தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக. கடந்த 10 ஆண்டுகளில் எங்கேயாவது மின்வெட்டு நடைபெற்றதா? ஆனால், இப்போது, சென்னை உட்பட எல்லா ஊரிலும் மின்வெட்டு இருக்கிறது.
கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் கார் கொடுத்தது ஒரு அரசியல்தான். இப்பொழுதுதான் முதல் பெண் டிரைவர் தமிழகத்தில் வந்துள்ளார்களா? என யோசியுங்கள். ஜெயலலிதா காலத்திலேயே பெண் ஓட்டுநர் இருந்துள்ளார். அப்பொழுது ஏன் அரசியல் செய்யவில்லை? அப்பொழுது ஏன் கார் வாங்கி கொடுக்கவில்லை? திமுக ஆட்சி செய்தால் எல்லாமே அரசியல்தான். ஆகையால் இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்தான். இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…