Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையின்றி குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது..! - டிஜிபிக்கு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்

Chandrasekar Updated:
தேவையின்றி குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது..! - டிஜிபிக்கு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் Representative Image.

பொது ஒழுங்கு முற்றிலும் மீறப்பட்டுள்ளதா என்பதைக் கவனத்தில் கொண்டே குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தேவை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என என மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா டிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியர்கள் காவல் துறை அதிகாரிகளின் பரிந்துரையை பரிசீலித்து குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலுக்கு உட்படுத்த ஆணை பிறப்பிக்கின்றனர். சமீப காலமாக, மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் குண்டர் சட்ட தடுப்பு காவல் ஆணைகள், சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன், தடுப்பு காவல் ஆணை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற  அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் ஆணையிடுகின்றன.   

இது சம்பந்தமாகசென்னை உயர்நீதி  மன்றம் உட்பட பல உயர்நீதி மன்றங்கள்  மற்றும் உச்ச நீதி மன்றத்தின் பலத்தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இச்சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்யும்முன் கையாள வேண்டிய உத்திகளை விரிவாக எடுத்துரைத்து, தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

கடிதத்தில் முக்கியமாக “பொது ஒழுங்கு” மற்றும் “சட்டம் மற்றும் ஒழுங்கு” குறித்த வேறுபாடுகளை விரிவாக எடுத்துரைத்து “பொது ஒழுங்கு” முற்றிலும் பாதிக்கப்படும் கடுமையான வழக்குகளில் மட்டும் இச்சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இச்சட்டத்தை விதிவிலக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்  எனவும், ஏனெனில் தவறாக பயன்படுத்தினால் இந்திய அரசியலமைப்பு சட்டம்  பிரிவு 21 மற்றும் 22ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயலாக அமையும் எனவும் தமது கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்க பரிந்துரைக்கப்படும் குற்றங்கள் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றங்களாக இருக்க வேண்டும் எனவும் மேலும் குற்றச்செயல்கள் பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாக இருக்க வேண்டும் எனவும் இக்குற்றச் செயலால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களோ ஒட்டு மொத்த சமூகமோ பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

சாதாரண சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையில் சம்பந்தப்படும் குற்றவாளிகளை கையாள இந்திய தண்டனை சட்டத்தில் போதுமான வழிமுறைகள் உள்ளன என்பதையும் காவல் துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை அனுப்புமாறு காவல் துறை தலைமை இயக்குநரை கேட்டு கொண்டுள்ளார்.

இதனால் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தடுப்பு காவல் ஆணைகள் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்படாமல் உறுதி செய்வதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்