சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை காவலில் எடுக்கவில்லை என்பதால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படவில்லை.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவின்படி ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜூன் 16ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி மாலை 3 மணி வரை அவரை அமலாக்கத் துறையினர் எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணங்களால் அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், உடல்நிலை மேலும் மோசமாகவும், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக காவேரி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழு தெரிவித்து இருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என ஜூன் 17ஆம் தேதியன்றே அமலாக்கத்துறை தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், அறுவை சிகிச்சை காரணமாக செந்தில் பாலாஜியை காவல் விசாரணைக்கு எடுக்க முடியவில்லை என்பதால், மீண்டும் தற்போது காவல் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி மனு அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவின்படி, காணொலிக்காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற காவல் முடியும் ஜூன் 28ஆம் தேதியன்று அமைச்சர் செந்தில்பாலாஜி காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…