சென்னையில் லோக்கல் ட்ரெயினில் படிக்கட்டுகளில் தொங்கிய படியும், கையில் பட்டாக்கத்தியுடனும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவர்கள் மாணவர்களா அல்லது ரவுடிகளா என மக்கள் அச்சத்தில் பார்க்க, பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க அனுப்பினால், கண்டகண்ட திரைப்படங்களில் பார்த்துவிட்டு, இது தான் கெத்து என்ற மனப்பான்மையுடன் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அலைவது ஒருபக்கம் பரிதாபமாகவும் உள்ளது.
சென்னையில் நீண்ட காலமாகவே இரண்டு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ரூட்டு தல என்ற பட்டத்தை போட்டுக்கொள்வது தான் இந்த பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி எனக் கூறப்படுகிறது.
நீண்டகாலமாக இந்த பிரச்சினை இருந்து வந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடுரோட்டில் பட்டாக்கத்தியுன் மாணவர்கள் வெட்டு குத்தில் இறங்கியதால் அதிர்ச்சியடைந்த அரசு நேரடியாக கவனம் செலுத்தி, மாணவர்களின் அராஜகத்தை ஒடுக்கினர்.
இதன் பின்னர் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறைந்திருந்தது. ஆனால் சமீபகாலமாக கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் சென்னையில் மீண்டும் தலைதூக்க தொடங்கிவிட்டது.
குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணாநகர் ரவுண்டானா அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் இதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்னொரு கல்லூரி மாணவர்களை பட்டாக்கத்தியுடன் விரட்டிச் சென்ற காட்சி பார்ப்போரை பதற வைத்தது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் லோக்கல் ட்ரெயினில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டமாக ஏறி, படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டுக் கொண்டும் சென்றுள்ளனர்.
இதில் சில மாணவர்கள் கையில் பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு பிளாட்பார்மில் அதை உரசியபடி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு புகார்அளித்தனர். இதையடுத்து வீடியோ ஆதாரத்தைக் கொண்டு இதில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இதில் ஈடுபட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசும் போலீசாரும் முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால், இது மிகப்பெரிய பிரச்சினையாக மீண்டும் மாறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…