பொங்கல் பண்டிகையை ஒட்டி ஈரோடு மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வரும் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஈரோடு பெரியவடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்த மாட்டோம் என்றும் சேவல்களை துன்புறுத்த மாட்டோம் என்றும் உறுதி அளித்தால், சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, சேவல்களை துன்புறுத்தக்கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவலுக்கு மது கொடுக்க கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
மேலும் சேவல் சண்டையின்போது குறிப்பிட்ட சமூதகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை மீறினால் காவல்துறையினர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…