திருப்பூரில் இன்று தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மக்கள் பயன்பெறும் வகையில் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
கோவை, திருப்பர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் கோவை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடந்த இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதையடுத்து இன்று திருப்பூர் மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை பெருந்துறையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பின்னர் சென்னை திரும்புகிறார்.
அதன்படி, இன்று காலை தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்து, திருப்பூர் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு
திருப்பூரில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதில் அரசின் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
முதல்வர் உரை
மாநாட்டில் உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் சீரான வளர்ச்சிக்காகவே அரசு பாடுபடுகிறது. கடந்த 15 மாத காலத்தில் நடத்திய முதலீட்டார்ளர்கள் மாநாடு மூலம் 220 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
முதல்வராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன், இனியும் வருவேன். திருப்பூர் தொழில்துறை வளரும் ஊராக மட்டும் இல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது.
நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு நன்கு பொருந்தும். திருப்பூரை தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி தான்.
பெருந்தொழில்களை மட்டுமே நம்பியிருக்காமல் குறு மற்றும் சிறு தொழில்களும் ஊக்கமடைய வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டு மையம் விரைவில் உருவாக்கப்படும்." என பேசினார்.
இதையடுத்து எம்எஸ்எம்இ நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…