மதுரையில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட குமரி சங்கமம் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, இதை சொந்த மாவட்டமாக நினைத்ததாகக் கூறினார். மீனவளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி, அதற்கு இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனை நியமித்து பெருமைச்சேர்த்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜியை பாதுகாக்க ஸ்டாலின் அரசு காவல்துறையை பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துவிட்டதாக சரத்பவார் கூறிய பத்தே நாட்களில் அவரது கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்றும், அதன் மூலம் முஸ்லிம்களும், கிறித்துவர்களும் அதிகமான பயன்களைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல் மதுரையில் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும், 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு அது திறக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…