கரூர்: தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த மாவட்டமான கரூரில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்கள் உட்பட பல இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 18 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப்பின், அது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை இல்லத்திலேயே விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவரை மேல்விசாரணைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முயன்றபோது, அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரைப் பார்க்க வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என திமுக வழக்கறிஞரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியிருந்தார். குற்றவியல் சட்ட விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், விசாரணைக்கான காரணத்தைத் தெரிவிக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டிய அவர், அமலாக்கத்துறையின் இந்த விதிமீறல் தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செந்தில்பாலாஜி மீதான இந்த வழக்கை தாம் எடுத்து நடத்தவிருப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளபோது, அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலியாக கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்குமாறும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…