கரூரில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே, கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் படி, கரூர் மாவட்டத்தில் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரின் புதிய வீடு ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னராகவே, கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றும் வேலைகள் இருந்துள்ளன.
இந்த வேலைக்காக, மோகன்ராஜ், ராஜேஷ் போன்ற தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு விஷவாயு தாக்கத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவர்களைக் காப்பாற்ற சிவகுமார் என்ற மற்றொரு கட்டிடத் தொழிலாளியும் இறங்கியதில் மூவருமே உயிரிழந்தனர். இது குறித்து விசாரித்த போது, 8 அடி உயரம் கொண்ட தொட்டியில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததாகவும், அதில் சவுக்கு குச்சிகள் உப்பி தேங்கிய நீரில் விஷ வாயு உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து, கட்டிட உரிமையாளர் மற்றும் மேஸ்திரி போன்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அதே கட்டிடத்தில் வேலை பார்த்த வனவாசியைச் சேர்ந்த கோபால் என்ற இளைஞர் இரண்டு நாள்களாக வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரர் நேரடியாக சென்று சம்பவம் நடைபெற்ற கட்டிடத்தில் பார்த்துள்ளார். இங்கு அவரது காலணி மட்டும் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சென்று பார்த்த போது, கோபால் உள்ளே உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், விஷவாயு தாக்கி மூவரும் உயிரிழந்த நிலையில், இப்போது நான்காவதாக மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…