ஆறு பேரை திருமணம் முடிந்து 7வது திருமணத்துக்கு தயாராக வந்த மோசடி பெண், தரகர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் நாமக்கலில் கைது செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கள்ளிபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான தனபாலுக்கு மதுரையை சேர்ந்த தரகர் பாலமுருகன் என்பவர் மூலம் சந்தியா என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா மற்றும் மாமா என இருவர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
திருமணத்தை முடித்துக் கொண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கமிஷனுடன் தரகர் மதுரைக்கு செல்ல, சந்தியாவின் அக்காவும், மாமாவும் கூட உடனே திரும்பிச் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து திருமணம் முடிந்த சந்தோசத்தில் தனபால் மணவாழ்க்கையை தொடங்கிய நிலையில், 9ஆம் தேதி அதிகாலை தனபாலுக்கு தெரியாமல் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகளுடன் சந்தியா கம்பிநீட்டிவிட்டார்.
இதையடுத்து தனபால் போலீசில் புகாரளித்த நிலையில், தனபால் வசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து வந்த நிலையில், சந்தியாவின் போட்டோ மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற தரகர் மூலம் வந்துள்ளதை அறிந்துள்ளார்.
இதையடுத்து உஷாரான தனபால், தரகரிடம் உறவினர்கள் மூலம் திருமணம் செய்யவதாக பேசி போன் மூலமே நிச்சயமும் செய்து, திருச்செங்கோட்டில் நேற்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வரவழைத்துள்ளார்.
உண்மையறியாத சந்தியா மேலும் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் திருச்செங்கோட்டில் தரகர் உள்ளிட்ட 4 பேருடன் வந்த நிலையில், அங்கு தனபால் இருப்பதை கண்டு சந்தியா அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து நான்கு பேரையும் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சந்தியா தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேரை இதேபோல் திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது.
ஒவ்வொரு திருமணத்தின் போதும் தரகர் கமிஷனாக லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, இரண்டு நாள் குடும்பம் நடத்திவிட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு செல்வதையே இவர்கள் தொழிலாக வைத்திருந்தது அம்பலமானது.
நாமக்கல் மட்டுமல்லாது கொங்கு பகுதிகள் முழுவதுமே தற்போது மணமகன்களுக்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. இதனால் பலரும் 30 வயதைத் தாண்டியும் திருமணம் செய்யாமல் தவித்து வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…