கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 39 வயதான செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதே கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான 52 வயதான ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நிலப்பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் செல்வக்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாகவும் கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது தெரிய வர, அதனை மூடி சீல் வைத்து விட்டு சென்றனர்.
இதனால், ஆத்திரம் மடைந்த செல்வக்குமார் ஜெகநாதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில், க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை செல்வக்குமார் தனது லாரி டிரைவரை ஏவி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜெகநாதனை லாரியை ஏற்றிக்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெகநாதன் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் ல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், லாரி டிரைவர் சக்திவேல் (24) மற்றும் டிரைவரின் கூட்டாளி ரஞ்சித் (44) ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…