வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் பெய்து வரும் தொடர் மழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 4000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கிடுகிடுவென உயர்ந்த அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,947 கனஅடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 4854 மில்லியன் கனஅடியாகும். இரவு 10 மணி நிலவரப்படி வைகை அணை 71 அடி உயரமுள்ள வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் ஆற்று கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ கடக்கவோ வேண்டாம் என்றும் நீர்வளத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வைகை அணை 66 அடியை எட்டினால் முதற்கட்டமாகவும், 68.5 அடியை எட்டினால் 2ம் கட்டமாகவும், 69 அடியை தொட்டால் 3ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…