ஆத்தூர்: தம்மம்பட்டி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரது உடலை கைப்பற்றி தம்மம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமங்கலம் பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி துறையூர் வனசரகம் கட்டுப்பாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் யாரும் குளிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டியை சேர்ந்த ராம்குமார் மகன் நிஷாந்த்குமார் (24) மற்றும் அவரது நண்பர் தமீம் (23), கோயமுத்தூரை சேர்ந்த ஜெஸ்வின் (23) மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் உட்பட நான்கு பேரும் காரில் ஒன்றாக பச்சமலைக்கு உட்பட்ட பெரியமங்கலம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் நிஷாந்த்குமார், தமீம், ஜெஸ்வின் மூன்று வாலிபர்களும் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நீரில் மூழ்கி தடுமாறிக் கொண்டிருப்பதை பார்த்த இளம் பெண் மூவரையும் காப்பாற்றக் கூறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நீர்வீழ்ச்சியில் விழுந்த நிஷாந்த்குமாரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கும் தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் பொறுப்பு செல்லபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் நீரில் மூழ்கிய தமீம், ஜெஸ்வின் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர்.
ஜெஸ்வின், தமீம் இருவரையும் தண்ணீரில் இருந்த மீன் மற்றும் நண்டுகள் கடித்துள்ளன. இதனால் முகத்தில் இரத்த கரையுடன் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தம்மம்பட்டி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த தமீம் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வருவதாகவும், ஜெஸ்வின் துணிக்கடையில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…