திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுனரை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ராஜப்பா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பேருந்துக்கு முன்பு வண்டியை நிறுத்தியுள்ளனர்.
பேருந்தை எடுக்க வேண்டும் என்பதால் ஓட்டுநர் ராஜப்பா மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நகர்த்தும்படி கூறியுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் ஓட்டுநர் ராஜப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ராஜப்பாவை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கூடி, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு ஆதரவாக ஓட்டுனர் ராஜப்பா மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் ராஜப்பா காயமடைந்த நிலையில், மீட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து போலீசில் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…