ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஒரு வருடம் முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.
அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன், மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர், கருப்பன் என பெயரிடப்பட்ட அந்த ஒற்றை யானையை, அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உப்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம் ,பகுதியில் அந்தக் கருப்பன் என்ற ஒற்றை யானை, விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் கருப்பன் யானை, ஜோரைகாடு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மக்காச்சோள தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யானையை விரட்டினர்.
ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் மீண்டும், மீண்டும் ஊருக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வன ஊழியர்கள் யானையை விரட்ட முடியாமல் திரும்பினர். இந்த நிலையில், தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் ஒற்றை கருப்பன் யானையை, கும்கி யானைகளை அழைத்து வந்து பிடிக்க வேண்டும் என வனத்துறை வாகனத்தை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்தனர்.
பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாவட்ட வன அலுவலர் நேரில் வந்தால் மட்டுமே வாகனத்தை விடுவிப்பதாக கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…