சென்னை: பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கும் சூழலில் அடுத்ததாக ஹெச்.வினோத்தும் அதே வழியை பின்பற்றவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசன்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.
மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் முன்னணி ஹீரோக்களின் பார்வையில் சிக்கினார்.
முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்தார்அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர். இதே ஸ்டைலை மாநகரம் படத்திலும் அவர் கடைப்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று படங்கள் வெற்றியை அடுத்து கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதை அவரே பல மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் கமல் ஹாசனின் எவ்வளவு வெறித்தனமான ரசிகன் என்பதை விக்ரம் மேக்கிங்கில் காண்பித்தார் அவர். குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கி அதகளம் செய்தார். படம் 500 கோடி ரூபாயை வசூலித்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
அவர் இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில்,”எனது எல்சியூ கான்செப்ட்டில் நம்பிக்கை வைத்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து விலகிவிடுவேன்” என கூறியிருந்தார் அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி துணிவு படத்தை இயக்கிய ஹெச்.வினோத்தும் (H.Vinoth) மொத்தம் பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அவரும் லோகேஷ் கனகராஜும் நெருங்கிய நண்பர்களும்கூட என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்.வினோத் பற்றிய இந்தத் தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் சமூக அக்கறையுள்ள இயக்குநரான வினோத் தொடர்ந்து சினிமா இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.
சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் பெரும் கவனம் ஈர்த்த வினோத் அஜித்தை மூன்று படஙக்ளை இயக்கினார். அவற்றில் துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் வங்கிக்கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் பேசியிருந்தார். அடுத்ததாக அவர் கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…