சென்னை: ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் திரைப்பட தொழிலாளர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ் படத்துக்கு வசூல், விமர்சனம் இவற்றையெல்லாம் தாண்டி மற்ற விஷயங்களிலும் நாளுக்கொரு பிரச்னை உருவாகிவருகிறது. சீதை குறித்த வசனத்துக்கு எதிர்ப்பு நேபாளத்தில் படத்துக்கு (இந்திய படங்களுக்கும்) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமன், ராமன், ராவணன் பற்றிய வசனங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். நேற்றுக்கூட அயோத்தி ராம ஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகர் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்துக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதன்படி ஆதிபுருஷ்ஷை தடை செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது. சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில், “ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் ராமரையும், அனுமனையும் அவமதிக்கும் வகையில் உள்ளன. மேலும் இந்துக்களின் மத நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் இப்படம் காயப்படுத்துகிறது.
ஸ்ரீராமர் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் கடவுளாக இருப்பவர். அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இப்படத்தில் ராமரையும், ராவணனையும் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை போல காட்டியுள்ளனர். இப்படத்தின் வசனங்களும் உலகம் முழுக்க வாழும் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்துக்கு உடனடியாக தடை விதிக்கவும், எதிர்காலத்தில் இப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாத வகையில் தடுக்கவும் பிரதமர் நரேந்திரம் மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.
இவர்கள் நடித்திருக்கக்கூடாது: படத்தின் இயக்குநர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மீது இந்துமத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்திய சினிமாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மோசமான ஒரு படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோனி, சைஃப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக் கூடாது” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒருபக்கம் கடுமையான விமர்சனங்களை படம் சந்தித்தாலும் மறுபக்கம் நல்ல வசூலை படம் ஈட்டிவருவதாக படக்குழு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் 240 கோடிவரை வசூலித்ததாக கூறப்படும் ஆதிபுருஷ் இதுவரை 370 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ஆனால் படத்தின் தோல்வியை மறைப்பதற்காக படக்குழு இப்படி போலியான தகவல்களை வெளியிட்டுவருவதாக ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…