தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி வருபவர் சரண்ராஜ். இவர், தனுஷ் நடிப்பில் வெளியான ’வடசென்னை’, ’அசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக சில காட்சியில் நடித்துள்ளார். இந்த நிலையில், சரண்ராஜ் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில், பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இவருடைய பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சரண்ராஜ் மீது மோதிய காரை ஓட்டி வந்தவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் பழனியப்பன் என்று தெரிய வந்தது. இவரும் துணை நடிகர் ஆவார்.
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் உயிரிழந்த சரண்ராஜும், பழனியப்பனும் சினிமாத் துறையில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகியுள்ளனர். பழனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் போதை அதிகமானால் தனது காரை ஓட்டுவதற்கு அவ்வப்போது சரண்ராஜை அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருந்துள்ளார். அப்படி தான் நேற்றும் பழனியப்பன் சரண்ராஜை அழைத்துள்ளார். இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்ற சரண்ராஜ் தன்னுடைய பைக்கை எங்கே விடுவது என்று தெரியாமல் கொஞ்ச தூரம் பைக்கை தான் ஓட்டி வருவதாகவும், பின்னர் பைக்கை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காரை ஓட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்தவகையில், சரண்ராஜ் பழனியப்பன் ஓட்டி வந்த காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போதுதான் பழனியப்பன் சரண்ராஜ் மீது மதுப்போதையில் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…