நகைச்சுவை வேடம் என்றாலே வடிவேலு தான் என சொல்லும் அளவுக்கு தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருந்தவர் வடிவேலு. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அப்போது வடிவேலு டாக்டர் பட்டத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தன. இந்நிலையில், வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட அந்த டாக்டர் பட்டம் போலியானது என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதால், அண்ணா பல்கலைக்கழகம் தான் தங்களுக்கு விருது வழங்குவதாக அனைவரும் நம்பி அந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இதில் வடிவேலு மட்டுமின்றி தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குனர் சாண்டி உள்பட ஏராளமான பிரபலங்களுக்கு அந்த போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த பட்டத்தை வழங்கினார்.
தற்போது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தையும், அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றியுள்ள அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…