சென்னை: ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார் ரஜினிகாந்த்.
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் நெல்சன் திலீப்குமாரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.. அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான காவாலா என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜா எழுதியிருக்கிறார். ஷில்பா ராவ் பாடியிருக்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். வழக்கமான அனிருத் பாடல் டெம்ப்ளேட்டில் இருந்தாலும் பாடல் செம வைப் கொடுப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி பாடலின் இடையே ரஜினி போடும் ஸ்டெப்களும் ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…