தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது குறித்து அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி செடிகள் கருகியதால், கடந்த சில வாரங்களாக வரத்து குறைந்து விலை அதிகரித்துவந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண், பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளியை கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சில்லறை விற்பனையிலும் தக்காளியின் விலை ஓரளவு குறைந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, தக்காளி விலை மேலும் உயராமல் தடுப்பது குறித்தும், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாகவும் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பண், துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் எப்போதிலிருந்து தக்காளி விற்பனைக்கு வரும், குடும்ப அட்டைதாரர்களுக்கு எத்தனை கிலோ தக்காளி வரை கிடைக்கும், ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…