டெல்லி:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் சிறுமிகளை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எல்லைமீறி வருகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் தலைநகரான டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் கழிவறையில் 11 வயது மாணவி இரண்டு சீனியர் மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், டெல்லி மகளிர் ஆணையம் (DCW) இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்னரே பாதிக்கப்பட்ட சிறுமி இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்க செவ்வாய்கிழமை அன்று காவல்துறையை அணுகியுள்ளார். சம்பவம் குறித்து ஆணையம் விசாரிக்கும்போது 'ஜூலை மாதம் தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்த போது, தனது பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் மீது சிறுமி தெரியாமல் மோதியுள்ளார். அவர் அம்மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை துன்புறுத்த ஆரம்பித்ததாகவும், கழிவறைக்குள் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
மாணவர்கள், கழிவறை கதவை உள்ளே இருந்து பூட்டிவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்தபோது, மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறியதாகவும், விஷயம் மூடிமறைக்கப்பட்டதாகவும் சிறுமி கூறியிருக்கிறார்.
பின்னர், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய டெல்லி டிசிபி அம்ருதா குகுலோத், மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசார் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை என பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…