திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் வசித்து வரும் 85 வயதான பெரியசாமி மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி (74). இவர்களது மகன் முருகானந்தம் (50). எலக்ட்ரீசியனான முருகானந்தம் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு தோல் நோய் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் தான் தனது தாயை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாய் ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி காரியங்களை செய்யவும் ஊர்க்காரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று முருகானந்தம் முடிவு செய்தார் . இதனால் தாயின் இறப்பு குறித்து முருகானந்தம் ஊரில் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களுக்கு செய்யப்படும் எந்த சடங்கையும் செய்யவில்லை .
அதனால் உயிரிழந்த தனது தாய் உடலை வீல் சேரில் வைத்து துணிகளால் போர்த்தி கட்டி, அதிகாலை 5.30 மணியளவில் 4 கி.மீ தொலைவில் உள்ள செவலூர் பகுதியில் இருக்கும் மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளார். மயானத்திற்கு சென்றவர் அங்கிருந்த ஊழியரிடம் தனது தாயை எரியூட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது, எரியூட்டுபவர் உற்றார் உறவினர்கள் இல்லை, பாடையோ, வண்டியோ இல்லை, பிறகு எப்படி தாயை தூக்கி வந்தீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அப்போதுதான் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என முருகானந்தம் விளக்கம் அளித்தார். முருகானந்தத்தின் உதவியுடன் மயான ஊழியர், ராஜேஸ்வரி உடலை எரியூட்டி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயை உற்றார் உறவினர் இன்றி, உரிய இறுதிச் சடங்குகள் செய்யாமல் அவரது மகன் இடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டிருப்பது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…