எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த ஜூலை 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.
இதற்கான முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.
இந்நிலையில், வெளியான நீட் தேர்வு முடிவில் மகாராஷ்டியா மாநிலம் அகோலாவைச் சேர்ந்த 18 வயதான மாணவி ரோகினி குறைவான மதிப்பெண் பெற்றதால் நகரிலுள்ள மோர்னா நதி பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ரோகினி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 350 மதிப்பெண் எடுத்திருக்கிறார். பின்னர், இரண்டாவது முறையாக அதாவது இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 565 க்கு மேல் மதிப்பெண் வரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரோகினி, 420 மதிப்பெண்களே எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த ரோகினி நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
பின்னர், வீட்டில் அனைவரும் தூங்கியதும் ரோகினி எழுந்து சென்று பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில் தான் இச்சம்பவம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. ஆற்றில் விழுந்த ரோகினி சடலத்தை மீட்டு வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த மாணவியின் இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…