சோறு இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்த ஸ்மார்ட் போன் பயன்பாடு. நவீன காலகட்டத்தில் மக்களின் பயன்பாடுகளில் முக்கிய அங்கமாக இருந்து வரும் செல்போன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி உபயோகித்து வருகின்றனர். கண்விழிப்பது முதல் தூங்கும் வரை, ஏன் கழிவறைக்கு போகும் போதும் விட்டுவைத்து இல்லை. அந்த அளவிற்கு இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. இருப்பினும், சாதாரன செல்போன்கள் என நாம் நினைப்பது பல நேரங்களில் நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது.
அப்படியொரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. பரேலி மாவட்டம் பச்சுமி கிராமத்தை சேர்ந்த சுனில்குமார் காஷ்யப். கூலித் தொழிலாளியான இவருக்கு குஷம் காஷ்யப் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றன. இதில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 8 மாதமே ஆகிறது. இதனிடையே, நேற்று சுனில்குமார் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ஒரு அறையில் தூங்க வைத்துள்ளார் குஷம். அப்போது தனது ஸ்மார்ட்போனை அவர் சார்ஜ் செய்துள்ளார்.
அந்த செல்போனுக்கு பக்கத்தில் தான் அவர்களின் இரண்டாவது குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், அவர் வெளியே துணிகளை காயப்போட்டு கொண்டிருந்த போது வீட்டுக்குள் பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ந்த போன அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், உடலில் 80 சதவீத தீக்காயங்கள் இருந்ததால் குழந்தையின் உடல்நிலை மோசமாகி, நேற்றி இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் தெரியாமல் நடந்த விபத்தில்தான் குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது
இதனால் போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. பிறந்து எட்டே மாதம் ஆன குழந்தையின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…