மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் 54 வயதான ஒருவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இதே காரணத்திற்காக டைலர் ஒருவர் கொள்ளப்பட்ட வடு காயும் முன்பு மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக ஒரு டிவி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து அவதூறாக நூபுர் சர்மா எனும் முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் பேசியதற்கு இந்தியாவிற்குள் மட்டுமல்லாது உலகளவில் இருந்தும் கண்டனங்கள் வந்தன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசினார் என்பதற்காக ராஜஸ்தானில் ஒரு தையல் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானின் கராச்சியை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் தொடர்பில் இருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா அமராவதி நகரைச் சேர்ந்த உமேஷ் பிரஹலாத்ராவ் கோல்ஹே என்ற கெமிஸ்ட் ஜூன் 21 அன்று இதே காரணத்திற்காக கொல்லப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 ஜூன் அன்று இரவு 10 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கோல்ஹே தனது கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருடன் அவரது மகன் சாகேத் (27), மனைவி வைஷ்ணவி ஆகியோர் வேறு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கெமிஸ்டின் கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான இர்பான் கான் (32) என்.ஜி.ஓ. ஒன்றை நடத்தி வருகிறார் என்று அமராவதி காவல்துறை ஆணையர் டாக்டர் ஆர்த்தி சிங் இன்று தெரிவித்தார்.
"கோல்ஹே அமராவதி நகரில் மெடிக்கல் ஸ்டோரை நடத்தி வந்தார். நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சில வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு பதிவைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது வாடிக்கையாளர்கள் உட்பட சில முஸ்லீம்களும் உறுப்பினர்களாக இருந்த வாட்ஸ்அப் குழுவில் அந்த இடுகையை பகிர்ந்துள்ளார்." என்று சிட்டி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்பிறகு, இர்பான் கான் கோல்ஹேவை ஒழிக்க ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். இதற்காக ஐந்து பேரை நியமித்து அவர்களுக்கு ரூ.10,000 தருவதாகவும், காரில் பாதுகாப்பாக தப்பிச் செல்ல உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். இதற்காக அமராவதி நகரில் வசிக்கும் முட்சீர் அகமது (22), ஷாருக் பதான் (25), அப்துல் தௌபீக் (24) ஷோயப் கான் (22) மற்றும் அதிப் ரஷித் (22) ஐந்து கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் கைப்பற்றி, சம்பவங்களின் தொடர்ச்சியை கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை பெற்றுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…