38 ஆண்டுகளுக்கு முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்று ராணிகேட்டில் உள்ள சைனிக் குழு சென்டர் 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என அடையாளம் கண்டுள்ளது.
ஹர்போலா 1984 இல் பாகிஸ்தானுடன் போரிடுவதற்காக ஆபரேஷன் மேக்தூத்'க்காக உலகின் மிக உயரமான போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட துருப்புக்களில் ஒரு பகுதியாக இருந்தார். ரோந்துப் பணியின் போது, அவர்கள் பனிப்புயலின் பிடியில் சிக்கினர். 15 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஐவரது உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களில் ஹர்போலாவும் ஒருவர்.
அல்மோராவைச் சேர்ந்த இவரது மனைவி சாந்தி தேவி தற்போது அங்குள்ள சரஸ்வதி விஹார் காலனியில் வசித்து வருகிறார். ஹர்போலாவின் வீட்டுக்குச் சென்ற ஹல்த்வானி சப்-கலெக்டர் மணீஷ் குமார் மற்றும் தாசில்தார் சஞ்சய் குமார் ஆகியோர், முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
அப்போது சாந்தி தேவி கூறுகையில், அவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆனபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சாந்திதேவிக்கு 28 வயது. அப்போது அவர்களது மூத்த மகளுக்கு நான்கு வயது, இளையவளுக்கு ஒன்றரை வயது.
ஹர்போலா கடைசியாக ஜனவரி 1984'இல் வீட்டிற்கு வந்ததாகவும், அதன் போது அவர் விரைவில் திரும்புவதாக உறுதியளித்ததாகவும் சாந்தி தேவி கூறினார். எவ்வாறாயினும், குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகளை விட நாட்டிற்கான தனது சேவைக்கு முன்னுரிமை அளித்ததால், தனது கணவர் குறித்து பெருமைப்படுவதாக சாந்தி தேவி கூறினார்.
அல்மோராவில் உள்ள துவாரஹாட்டில் வசித்த ஹர்போலா 1975 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தார். மேலும் ஒரு சிப்பாயின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…