மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பப்படி அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான 6ஜி'யில் உலக அளவில் இந்தியா முன்னணி வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வைத்த நிலையில், அஸ்வினி வைஷ்ணவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 5ஜி சேவை அறிமுகத்திற்குப் பிறகு, வரும் 6 மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 80-90 சதவீத மக்களுக்கு 5ஜி சேவைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைஷ்ணவ் கூறினார்.
மேலும் பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவைகளை வழங்க உள்ளது என்றும் 5ஜி சேவை மலிவு விலையில் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் 5ஜியின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆம் ஆண்டளவில் 450 பில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து, இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவுக்கான வரலாற்று நாள் என்றும், இந்த தொழில்நுட்பம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…