டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலன் அஃப்தப் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் அஃப்தப் அமீன் பூனாவாலா மற்றும் ஷ்ரத்தா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தா வீட்டில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் வீட்டை விட்டு வெளியேறி ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருவரும் டெல்லி மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா, அஃப்தப்பை வலியுறுத்தி வந்ததால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஃப்தப், ஷ்ரத்தாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை கொடூரமாக கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார் சைக்கோ அஃப்தப். இந்த சம்பவம் குறித்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கும் தருணத்தில், மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். அதாவது, "படித்த பெண்களுக்கு தான் இப்படி நடக்கிறது. தங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தங்களின் எதிர்கால முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கின்றனர்.
எதற்காக லிவ்விங் வாழ்க்கையில் வாழ வேண்டும். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்து வாழ வேண்டியது தானே. படித்த பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை பொறுப்புடன் வாழ வேண்டும். இது போன்ற லிவ்விங் முறையில் வாழ கூடாது" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருது பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணை குறை சொல்வதாக இருக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். " நல்ல வேளை பெண்கள் இந்த நாட்டில் பிறந்து தான் குற்றம் என்று அவர் கூறவில்லை. வெட்கமில்லாமல், ஈவு இரக்கம் இல்லாமல் அணைத்து பிரச்சனைகளுக்கும் பெண்கள் தான் காரணம் என்று சொல்வது இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்தை பிரதமர் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் என்றால், இந்த மத்திய அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் சுமையை பெண்கள் போதுமான வரை சுமந்து விட்டார்கள்" என்று அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…