தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் ஜூலை 12ம் தேதி தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்வது வழக்கம். இதற்கென பண்டிகை நாட்களில் தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை கொண்டாட ரயில்களில் சொந்த ஊருக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூலை 12ம் தேதி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 12ம் தேதி தீபவாளிப் பண்டிகை என்பதால், நவம்பர் 9ம் தேதியே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஜூலை 12ம் தேதி முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 10ம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ம் தேதியும், நவம்பர் 11ம் தேதி செல்பவர்கள் ஜூலை14ம் தேதியும் ரயில்களில் முன்பதிவு செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியின் அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய ரயில்துறை அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் முன்பதிவின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாதவகையில் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டுவருவதாகவும் தெரிவித்தனர். ஜூலை 12ம் தேதி முதல் தொடங்கும் முன்பதிவுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து அந்தந்த ரயில்வே மண்டலங்கள் முடிவெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…