சென்னை அமைந்தகரையில் நேற்று முன்தினம் நடந்த திமுக பொதுக்குழுவில்,திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் இரண்டாவது முறையாக தலைவராக பொறுப்பேற்றதைவிட அவர் பொதுக்குழுவில் பேசியதுதான் அதிகமாக செய்தி ஆக்கப்பட்டது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல தன் நிலைமை உள்ளதாகவும், கட்சியினர் மூத்த நிர்வாகிகள் நடவடிக்கையால்தான் தூக்கமின்றி தவிப்பதாகவும், காலையில் எழுந்ததும் நம்மவர்கள் யாரும் எந்த ஒரு புதிய பிரச்சனையையும் உருவாக்கி இருக்கக் கூடாது என்ற சிந்தனையிலேயே தான் கண்விழிப்பதாகவும், இது சில நேரங்களில் அவரைதூங்க விடாமல் தடுப்பதாகவும் அவர் மனக்குமுறல்களை கொட்டினார். இது
திமுகவின் கவனத்தை மட்டுமல்லாமல், பொதுமக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமீபத்தில் பொதுஇடங்களில் பேசிய பேச்சுகள் தான் முதல்வரின் ஆதங்கத்திற்கு காரணம். நீலகிரி எம்பி ஆ ராசா இந்து மதத்தை பற்றி பேசியது, அரசால் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை மக்கள் பிரதிநிதியான அமைச்சர் பொன்முடி பொதுமேடைகளில் இழிவாக பேசியது போன்றவை திமுகவினரின் அநாகரிக பேச்சுகளுக்கு சமீபத்திய உதாரணம்.
கட்சித் தலைமைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் திமுகவினர் செயல்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்த வருடம் தொடக்கத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் நின்று வென்றதும், வென்றபின் தலைவர் முக ஸ்டாலின் சொல்லியும் பதவி விலக மறுத்ததும் திமுகவினர் கட்சிக்கு கட்டுப்படவில்லை என்பதற்கான உதாரணங்கள்.
தமிழகத்தில் வரும் 2024ஆம் ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற குறிக்கோளுடன் இருக்கும் திமுகவிற்கு, அந்த குறிக்கோள் நிறைவேற வேண்டுமானால் இந்த வெற்று பேச்சுகளை தவிர்த்து, ஆட்சியில் கவனம் செலுத்தி மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…