சென்னை: செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார். இது நடந்து 10 நாள்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.
மொத்தமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறிருக்க எதன் அடிப்படியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. செம்மண் குவாரி தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.
அதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இதய அறுவை சிகிச்சை, நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் என அரங்கேறிய நிகழ்வுகளுக்குப் பின்னர், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் , `செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்' என உத்தரவிட்டது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமாக அமைந்திருக்கும் இந்த வேளையில் தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…