தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை தடைவிதித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த கால கட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும். குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு படையெடுப்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, 2 வாரங்களை கடந்த நிலையிலும் சீசன் தொடங்காமல் தாமதமானதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்துவருவதால் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. அருவிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மாலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது.
இதனால், நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டத் தொடங்கியதால், அருவியில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை தடை விதித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 7-30 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மெயின் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குற்றாலத்திலும் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால், சீசன் களை கட்டத் தொடங்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…